பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
By: Nagaraj Wed, 16 Sept 2020 12:19:45 PM
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த வழக்கில் முக்கிய குற்றவாளியை என்ஐஏ கைது செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் பாகிஸ்தான் உளவாளிகளுடன் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு வைத்துக் கொண்டு பாதுகாப்பு ரகசியங்கள் பற்றிய தகவல்களை அவர்களுக்கு வழங்கி வந்தது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஏற்கெனவே 11 கடற்படை அதிகாரிகள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான கிடெலி இம்ரான் (37)
என்பவரை என்ஐஏ கைது செய்துள்ளது. குஜராத் மாநிலம் கோத்ராவைச் சேர்ந்த
இம்ரானுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தொடர்பு இருப்பதும்
தெரியவந்துள்ளது. ஜவுளி வியாபாரம் என்ற போர்வையில் பாகிஸ்தான் உளவாளிகளுடன்
இம்ரானுக்கு தொடர்பு இருந்துள்ளது.
அவர்களது உத்தரவின் பேரில்
ரகசியங்களை பாகிஸ்தானுக்கு தெரிவிக்கும் கடற்படை அதிகாரிகளின் வங்கிக்
கணக்கில் குறிப்பிட்ட கால இடைவெளியில் இம்ரான் பணம் செலுத்தியுள்ளார்.
இத்தகவலை என்ஐஏ செய்தித் தொடர்பாளர் சோனியா நரங் தெரிவித்தார். இம்ரான்
வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவரிடம்
தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும் அவர் கூறினார். இம்ரானையும் சேர்த்து
இவ்வழக்கில் இதுவரை 15 பேர் கைதாகியுள்ளனர்.