ரூ.5 சம்பளத்திற்கு வேலைக்கு சென்றவர் இன்று பெரிய நிறுவனத்தின் நிர்வாகி
By: Nagaraj Sun, 01 Nov 2020 11:15:08 AM
ஒரு நேரத்தில் ரூ.5க்கு வேலைக்கு சென்றவர் இன்று பல கோடிகள் வருமானம் ஈட்டும் நிறுவனத்தின் நிர்வாகியாக உள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் பிறந்த ஜோதி, குடும்ப சூழ்நிலை காரணமாக தாயில்லா பிள்ளை என்று பொய் சொல்லி, தன் தந்தையாலேயே ஒரு அனாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அங்கேயே பல வருடங்கள் தனிமையில் வாடினார். லீவு நாட்களில் கூட ,அனாதை இல்ல மேற்பார்வையாளரின் வீட்டில் வேலை செய்து, அங்கேயே உண்டு உறங்கியிருக்கிறார் இந்த ஜோதி.
இவர் பத்தாம் வகுப்பு முடித்த உடனேயே வீட்டில் இருந்து வந்து அழைத்து சென்று பின் கையோடு திருமணம் செய்து கொள்ளவும் வற்புறுத்தப்பட்டார். 16 வயதிலேயே திருமணம், இரண்டு குழந்தைகளுக்கு தாயானதோடு, தினமும் 5 ரூபாய் சம்பளத்திற்கு வயலில் தினக் கூலி வேலை என சிரமப்பட்டார்.
1989 ஆம் வருடம், ஜவஹர் கிராம யோஜனா எனப்படும் இளைய தலைமுறைக்கு வேலை வாய்ப்பு திட்டம் ஜோதியின் வாழ்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கிராம இளைஞர்களுக்காக வகுப்புகள் எடுக்கப்பட்டன. அந்த வகுப்புகளில் பாடம் சொல்லிக் கொடுக்க, படித்தவர்கள் வேறு யாரும் இல்லாததால் இந்த பெண் அங்கு வேலைக்கு சேர்ந்தார்.
சம்பளம் போதாததால் இரவு நேரங்களில் தையல் வேலையில் ஈடுப்பட்டார். பின் சில
காலத்தில் டைபிங் கற்றுக் கொண்டார். பட்ட அவமானங்கள் கல்வியின்
முக்கியதுவத்தை உணர்த்தியது. திறந்த நிலை பல்கலைக் கழகத்தில் முதுநிலை
பட்டப் படிப்பு வரை படித்து, அரசு ஆசிரியராக பணியில் சேர்ந்தார். தான்
தைத்த துணிகளை பயணம் செய்யும் பேருந்துகளில் விற்பார். தனக்கு கிடைக்கும்
கொஞ்ச ஓய்வு நேரத்தில் கூட, வீணடிக்காமல் பயனுள்ள வகையில் செலவழிப்பார்.
அவரின் உறவினர் ஒருவர் அமெரிக்கா சென்றால் நல்ல வேலை வாய்புகள் கிடைக்கும் என கூற, கணினி கற்க ஆரம்பித்தார்.
பாஸ்போர்ட்,
விசாவுக்கு பணம் சேர்க்க துவங்கினார். இரு மகள்களையும் விடுதியில்
விட்டுவிட்டு அமெரிக்க செல்ல ஆயத்தம் ஆனார். அமெரிக்கா சென்ற பின் சரியான
வேலையும், தங்க ஒரு இடமும் கூட கிடைக்காமல் அலைந்தார். இறுதியில் 'மூவி
டைம்' என்கிற வீடியோ கடையில் வேலைக்கு தற்காலிகமாக சேர்ந்தார்.
பல
நாட்கள் போராட்டத்திற்கு பிறகு ஒரு நல்ல அமெரிக்க கம்பெனியில் வேலை
கிடைத்தது. ஆனால் விதி விளையாடியது. விசா பிரச்னையால் அந்த வேலையையும் விட
வேண்டி வந்தது.
விசா பிரச்சனையால், தான் சந்தித்த மன வேதனையை வேறு
யாரும் அனுபவிக்கக் கூடாது என்று விரும்பினார். அங்கு தோன்றியதுதான்
கம்பெனி தொடங்கும் கனவு. அந்த துறையில் அனுபவம் பெற்றார்.
பல
நாட்கள் மிக கடினமாக உழைத்ததால். இன்று ஜோதி கீ சாப்ட்வேர் சொல்யூஷன்
நிறுவனத்தின் இயக்குனர். பல கோடி ரூபாய் லாபம் ஈட்டும் நிறுவனத்தின்
இயக்குனர் ஜோதி. இந்தியா வரும்போதெல்லாம் பல அனாதை இல்லங்களுக்கும், மகளிர்
கல்லூரிகளுக்கும் சென்று மோட்டிவேடிங் ஸ்பீச் கொடுக்கிறார்.
கடும்
வெயிலில் கூட வெறும் கால்களோடு செருப்பின்றி நடந்த ஜோதி, இன்று அறை முழுக்க
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் செருப்புகளை எதை அணிவது என யோசிக்க பத்து
நிமிடம் ஆகும் அளவு உயர்ந்திருக்கிறார். சிறு சிறு தடைகளை வென்று, பெரிய
பெரிய வெற்றிகளை சுவைக்க துடிக்கும் ஒவ்வொரு இந்தியப் பெண்ணிற்கும் இந்த
பெண்ணின் வாழ்க்கை பெரிய உதாரணம்.