தென்மேற்கு அரபிக் கடலில் ‘தேஜ்’ புயல் உருவானதாக வானிலை மையம் அறிவிப்பு
By: vaithegi Sat, 21 Oct 2023 11:51:22 AM
சென்னை: கடந்த 19-ம் தேதி தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று நள்ளிரவு வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது. நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவியது.
இதையடுத்து இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். இது மேலும் வலுவடைந்து நாளை மாலை தீவிர புயலாக நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தென்மேற்கு அரபிக்கடலில் தேஜ் புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப்புயலாகவும், 24 மணி நேரத்தில் மிக தீவிரப்புயலாகவும் வலுப்பெறக்கூடும் . வருகிற 25ஆம் தேதி அதிகாலை ஓமன் - ஏமன் இடையே புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.`