எனது ஆட்சி அதிகார மாற்றத்துக்கு ராணுவம் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை - ஜோ பைடன்
By: Karunakaran Wed, 30 Dec 2020 6:40:00 PM
அமெரிக்காவில் கடந்த மாதம் 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தற்போதைய ஜனாதிபதி டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் டிரம்பை விட அதிகமான தேர்தல் சபை வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜனவரி மாதம் 20-ந்தேதி பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது.
ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. டிரம்பின் பிடிவாதத்தால் அதிகார மாற்றத்தை முன்னின்று செய்யும் ‘ஜெனரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன்’ (ஜி.எஸ்.ஏ.) என்ற அரசு அமைப்பு ஜோ பைடனின் வெற்றியை அறிவிப்பதில் காலம் தாழ்த்தி வந்தது. இதனால் ஜோபைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதில் சிக்கல் எழுந்தது.
நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த மாத இறுதியில், ஜோ பைடனுக்கு முறைப்படி ஆட்சி அதிகாரத்தை மாற்ற டிரம்ப் சம்மதம் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து ஜோ பைடனின் அதிகார பரிமாற்ற குழு ஆட்சி அதிகார மாற்றத்துக்கான பணிகளை தீவிரப்படுத்தியது. இந்நிலையில் ஜோ பைடன், எனது அதிகார பரிமாற்ற குழு அரசியல் தலைமையிலிருந்து தடைகளை எதிர்கொண்டு வருகிறது. உலகெங்கிலும் உள்ள அமெரிக்க படைகள் குறித்த தெளிவான விவரங்கள் தேவை. எனவே அமெரிக்க ராணுவம் எனது அதிகார பரிமாற்ற குழுவுடன் முழுமையாக ஒத்துழைத்து தேவையான அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும் என்று கூறினார்.
ஆனால் அமெரிக்க ராணுவம் மீதான ஜோ பைடனின் இந்த குற்றச்சாட்டை ராணுவ மந்திரி கிறிஸ்டோபர் மில்லர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்க ராணுவம் இதுவரை 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுடன் 164 சந்திப்புகளை நடத்தி உள்ளது. மேலும் 5 ஆயிரம் பக்கங்களுக்கும் மேலான ஆவணங்களை வழங்கியுள்ளது. இது ஆரம்பத்தில் ஜோ பைடனின் அதிகார பரிமாற்ற குழு கோரியதை விட மிக அதிகம் என கூறினார்.