எல்லையில் நடந்த பிரச்சினைக்கு மோடி அரசின் மோசமான நிர்வாகமே காரணம் - சோனியா காந்தி
By: Karunakaran Wed, 24 June 2020 09:53:18 AM
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் போன்ற பலர் கலந்து கொண்டனர். அப்போது, லடாக்கில் சீன ராணுவ தாக்குதலில் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன்பின் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, துரதிருஷ்டம் என்பது தனியாக வருவதில்லை. பொருளாதார பின்னடைவு, கொரோனா பிரச்சினை, சீனாவுடனான எல்லை விவகாரம் என்று சேர்ந்து வந்துள்ளது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் மோடி அரசின் மோசமான நிர்வாகமும், தவறான கொள்கைகளுமே காரணம். மோடி அரசின் மாபெரும் தோல்விகளில் ஒன்றாக இது பதிவு செய்யப்படும் என்று கூறினார்.
மேலும் அவர், பிரதமரின் உத்தரவாதத்தையும் மீறி, கொரோனா வைரஸ் இன்னும் அச்சுறுத்தி வருவதாகவும், ஊரடங்கு காரணமாக, பொருளாதார நடவடிக்கை முடங்கி உள்ளதாகவும், நல்ல அறிவுரைகளை மோடி அரசு கேட்க மறுப்பதாகவும், கொரோனா பிரச்சினையில், சுகாதார கட்டமைப்பு குறைபாடு அம்பலம் ஆகியுள்ளதாகவும் கூறினார்.
கடந்த 42 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவை நோக்கி பொருளாதாரம் சென்று கொண்டிருக்கிறது. இதன் பின், வேலையில்லா திண்டாட்டம், வருமான வீழ்ச்சி, முதலீட்டு வீழ்ச்சி ஆகியவை ஏற்படும் என்று அஞ்சுகிறேன். இதிலிருந்து மீண்டு எழ நீண்ட காலமாகும். அதுவும், மத்திய அரசு தனது தவறுகளை சரிசெய்து, சரியான பொருளாதார கொள்கைகளை பின்பற்றினால்தான் நடக்கும் என்று கூட்டத்தில் சோனியா காந்தி கூறினார்.