இங்கிலாந்தில் மாறுபட்ட குணங்களுடன் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ்
By: Karunakaran Sun, 20 Dec 2020 6:57:13 PM
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் அவற்றை நேரடியாக மக்களுக்கு வழங்க தொடங்கியுள்ளன. இருப்பினும், இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இரட்டிப்பாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மாறுபட்ட குணங்களுடன் புதிய கொரோனா வைரஸ் இருப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். லண்டன், தென்கிழக்கு, கிழக்கு இங்கிலாந்து பகுதிகளில் மீண்டும் பொதுமுடக்கம் அமலுக்கு வருவதாக அறிவித்தார். அத்தியாவசியப் பணிகளுக்காக மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டும். அத்தியாவசியமற்ற கடைகள், உள் அரங்க உடற்பயிற்சி கூடங்கள், பொழுதுபோக்கு கூடங்கள் அனைத்தும் மூடப்படும் என்றார்.
இந்த தடை வரும் டிசம்பர் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றார். கூடுமானவரை பொதுமக்கள் பயணங்களை தவிர்க்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார். அதில், நாட்டு மக்களை பாதுகாக்கும் வகையில் இக்கட்டான நேரத்தில் ஒரு பிரதமராக கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியது எனது கடமை என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், புதிய வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் நாம் ஏற்கனவே திட்டமிட்டப்படி கிறிஸ்துமஸை கொண்டாட முடியாது என்பதை கனத்த இதயத்துடன் சொல்லிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் மாறுபட்ட குணங்களுடன் புதிய கொரோனா வைரஸ் பரவுவாக வெளியாகியுள்ள செய்தி அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.