நிசர்கா புயல் ஜூன் 4-ம் தேதி கரையை கடக்கக்கூடும் - வானிலை மையம்
By: Monisha Tue, 02 June 2020 5:02:03 PM
தென்கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதி மற்றும் அதையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவடைந்து புயலாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நீண்டகால அடிப்படையில் 107 சதவீதம் என்ற அடிப்படையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலுக்கு நிசர்கா எனப் பெயரிடப்பட்டுள்ளது. தற்போது அரபிக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசையில் 11 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் சின்னம் காரணமாக ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் கொங்கண் பகுதி, கோவா ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
அதே போன்று வடக்கு கொங்கண் மண்டலம், மகாராஷ்டிராவின் வடக்கு மத்திய பகுதி ஆகிய இடங்களில் ஜூன் 3, 4 ஆகிய தேதிகளிலும், தெற்கு குஜராத், டாமன், டையு, தாத்ரா நாகர் ஹவேலி உள்ளிட்ட இடங்களில் ஜூன் 3-ம் தேதியும் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நிசர்கா புயல் சின்னம் குஜராத்தின் சூரத் நகரில் இருந்து 710 கிலோ மீட்டர் தெற்கு தென்மேற்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது. இதுமேலும் வலுவடைந்து குஜராத் மாநிலம் நவுசாரி அருகே ஜூன் 4-ம் தேதி கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு பேரிடர் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர்.