கட்சி உயர் மட்டக்குழுவை கூட்டி விவாதித்த வடகொரியா அதிபர்
By: Nagaraj Tue, 28 Feb 2023 10:31:18 PM
சியோல்: ஆளும் தொழிலாளர் கட்சியின் உயர்மட்டக் குழுவை அதிபர் கிம் ஜாங்-உன் கூட்டினார். இதில் உணவு உற்பத்தியை அதிகரிப்பது, விவசாய முன்னேற்றம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே எல்லை பிரச்னை தொடர்பாக மோதல் நிலவி வருகிறது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதால் ஆத்திரமடைந்த வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டி வருகிறது. வடகொரியா கடந்த ஆண்டில் மட்டும் 70க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா இந்த செயலில் ஈடுபட்டதால் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகொரியாவில் கடும் உணவு தட்டுப்பாடு நிலவுவதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிலர் பசி மற்றும் பட்டினியால் இறந்ததாக செய்திகள் வந்தன.
ஆனால் இதை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது. சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக வடகொரியாவிற்கு அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் இறக்குமதி பாதிக்கப்பட்டு உணவு உற்பத்தி 20 சதவீதம் குறைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அணு ஆயுதங்களுக்காக வடகொரியா அதிகளவில் செலவு செய்து வருவதாகவும், சர்வதேச பொருளாதார தடைகள் மற்றும் ஏவுகணை சோதனைகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, ஆளும் தொழிலாளர் கட்சியின் உயர்மட்டக் குழுவை அதிபர் கிம் ஜாங்-உன் கூட்டினார்.
இதில் உணவு உற்பத்தியை அதிகரிப்பது, விவசாய முன்னேற்றம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. விவசாயம் பற்றி விவாதிக்க மட்டுமே கட்சி கூட்டப்பட்டது இதுவே முதல் முறை.
இதில் பேசிய அதிபர் கிம் ஜாங், நாட்டில் உணவு உற்பத்தி இலக்கை எட்டுவதற்கும், சந்தையில் உணவு பொருட்கள் விற்பனைக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் முதல் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்