விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,712 ஆக அதிகரிப்பு
By: Monisha Tue, 14 July 2020 11:22:12 AM
விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே 1,602 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 798 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து 567 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,032 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னை மாவட்டம் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,573 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையை தொடர்ந்து தற்போது மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மதுரை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவள்ளுர், தேனி ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோய் பரவல் அதிகளவில் உள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே 1,602 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,712 ஆக அதிகரித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 954 பேர் குணமடைந்துள்ளனர். 19 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.