அமீரகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்வு
By: Karunakaran Sun, 23 Aug 2020 6:52:41 PM
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. இந்த வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அமீரகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாக அமீரக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் பரிதா அல் ஹொசனி தெரிவித்துள்ளார். இத்தகைய பாதிப்பு அதிகரிப்பதற்கு சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுமே காரணமாவர் என்று கூறியுள்ளார்.
இந்த பாதிப்பை தடுக்க தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்படும். ஒரு சிலர் முக கவசம் அணியாமலும், கையுறைகள் போன்ற பாதுகாப்பு கவசங்களை அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் உள்ளதாக டாக்டர் பரிதா அல் ஹொசனி கூறியுள்ளார். குடும்ப சந்திப்புகளை மேற்கொள்வதும், அதன் காரணமாக கைகளை ஒருவருக்கொருவர் குலுக்கி கொள்வதும் இத்தகைய பாதிப்பு அதிகரிக்க காரணமாக இருக்கிறது.
கொரோனா பாதிப்பு 20 வயது முதல் 40 வயதுடைய இளைஞர்களிடையே அதிகமாக காணப்படுவதாகவும், அவர்களது தவறான முடிவு காரணமாகவே இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவதாகவும், எனவே அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என டாக்டர் பரிதா அல் ஹொசனி தெரிவித்துள்ளார்.