உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 30 லட்சத்தை கடந்தது
By: Karunakaran Sat, 22 Aug 2020 1:37:38 PM
சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த கொரோனா வைரஸ் உலகின் 213 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 30 லட்சத்து 96 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்தியா, அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 68 ஆயிரத்து 898 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நேற்று 49 ஆயிரம் பேருக்கும், பிரேசிலில் 31 ஆயிரம் பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, உலகம் முழுவதும் 2 கோடியே 30 லட்சத்து 96 ஆயிரத்து 649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்புடைய 66 லட்சத்து 5 ஆயிரத்து 513 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 61 ஆயிரத்து 849 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து 1 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இதுவரை 8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.