உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியை கடந்தது
By: Karunakaran Thu, 17 Sept 2020 10:36:08 AM
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியிருப்பினும், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 கோடியாக அதிகரித்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 90ஆயிரத்து 123 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகி கொண்டே வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 25 ஆயிரத்து 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 15 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 9 லட்சத்து 44 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொரோனா அதிகம் பரவிய நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காபில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 68,27,791 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,20,360 ஆகவும், பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44,21,686 ஆகவும் உள்ளது.