உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 89 லட்சமாக அதிகரிப்பு
By: Karunakaran Thu, 06 Aug 2020 11:34:28 AM
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், இதன் தாக்கம் குறைந்த பாடில்லை.
தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 89 லட்சத்து 56 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அமெரிக்கா, பிரேசில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அசுரவேகத்தில் உள்ளது. இந்த மூன்று நாடுகளிலும் தினமும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 61 லட்சத்து 4 ஆயிரத்து 823 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 514 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பினால், இதுவரை 7 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா அதிகம் பரவிய நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் 49,73,514 பேரும், பிரேசிலில் 28,62,761 பேரும், இந்தியாவில் 19,08,255 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.