உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 84 லட்சமாக அதிகரிப்பு
By: Karunakaran Tue, 04 Aug 2020 11:43:22 AM
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் உலகம் முழுவதும் 1 கோடியே 84 லட்சத்து 34 ஆயிரத்து 505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடைய 60 லட்சத்து 72 ஆயிரத்து 489 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 64 ஆயிரத்து 732 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 15 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இருப்பினும் கொரோனாவால் இதுவரை 6 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் தற்போது 48,61,796 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாகி பிரேசில். இந்தியா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.