பெங்களூரு நகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது
By: Karunakaran Fri, 31 July 2020 2:02:23 PM
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டிவிட்டது. றிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் உள்ளது. கடந்த ஒரு வாரமாக பெங்களூருவில் தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தை தொட்டு வருகிறது.
பெங்களூருவில் இந்த மாதத்தில் நேற்று முன்தினம் வரை 46 ஆயிரத்து 536 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பில் கர்நாடகத்தில் உடுப்பி மாவட்டம் தான் முதலில் ஆயிரத்தை தாண்டியது. தற்போது பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், உடுப்பியை பின்னுக்கு தள்ளிவிட்டு பெங்களூரு தற்போது முதலிடத்தை பிடித்து விட்டது.
நேற்று வரை பெங்களூருவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 51 ஆயிரத்து 91 ஆக இருந்தது. தற்போது கொரோனா நோயாளிகள் அதிகளவில் சிகிச்சையில் உள்ள நகரங்களில் பட்டியலில் பெங்களூரு 2-வது இடத்தை பிடித்து உள்ளது. மராட்டிய மாநிலம் புனே நகரம் முதலிடத்தில் உள்ளது.
பெங்களூருவில் கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 13 ஆயிரத்து 879 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் கொரோனா பாதிப்புடைய 36 ஆயிரத்து 224 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். இதனால் அங்குள்ள மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.