பிரேசில் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்தது
By: Karunakaran Tue, 11 Aug 2020 11:37:12 AM
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 2 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். கொரோனா பாதிப்பினால் உலகம் முழுவதும் இதுவரை 7.36 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனா அதிகம் பாதித்த நாடாக பிரேசில் உள்ளது. தற்போது பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும் அங்கு கொரோனா காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.01 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இருப்பினும் அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 21.6 லட்சத்தைத் தாண்டியுள்ளது. பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா, ரஷ்யா நாடுகள் உள்ளன. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.