பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31.50 லட்சத்தை தாண்டியது
By: Karunakaran Thu, 13 Aug 2020 11:49:56 AM
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7.50 லட்சத்தைக் கடந்துள்ளது.
உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனா அதிகம் பாதித்த நாடாக பிரேசில் நாடு உள்ளது. தற்போது பிரேசிலில் ஒரே நாளில் 58 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31.70 லட்சத்தைக் கடந்துள்ளது.
பிரேசிலில் ஒரே நாளில் 1,160-க்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பினால் பலியாகினர். இதனால் அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பினால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1.04 லட்சத்தை தாண்டியுள்ளது. இருப்பினும் அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 23 லட்சத்தை கடந்துள்ளது.