பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்தைக் கடந்தது
By: Karunakaran Wed, 19 Aug 2020 4:26:49 PM
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடந்த 8 மாதங்கள் ஆகியும் குறைந்தபாடில்லை. இதற்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் முழு ஊரடங்கு, தனிமனித இடைவெளி ஆகியவையே வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளாக உள்ளன.
தற்போது, உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2.22 கோடியைத் தாண்டியுள்ளது. இருப்பினும் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 1.50 கோடியைத் தாண்டியுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7.82 லட்சத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில் பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் 48 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், ஒரே நாளில் 1365 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனா பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ள நிலையில், 7 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் பிரேசில் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.