கொலம்பியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6.50 லட்சத்தைத் தாண்டியது
By: Karunakaran Sat, 05 Sept 2020 09:10:55 AM
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுக்க பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டாலும், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது, உலகம் முழுவதும் 2.66 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக, 8.76 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவை பின்னுக்குத் தள்ளி கொலம்பியா 6-வது இடத்தில் உள்ளது. தற்போது, கொலம்பியாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.50 லட்சத்தைக் கடந்துள்ளது.
கொலம்பியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஒரே நாளில் 8,488 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.50 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், ஒரே நாளில் கொரோனா தாக்குதலால் 270 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொலம்பியாவில் தற்போது கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 888 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், அங்கு கொரோனாவில் இருந்து 4.98 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.