எகிப்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது
By: Karunakaran Wed, 09 Sept 2020 1:18:42 PM
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியிருப்பினும், மக்கள் பயன்பாட்டுக்கு இன்னும் வரவில்லை.
நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் எகிப்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எகிப்தில் கடந்த 24 மணி நேரத்தில் 178 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து எகிப்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்து, 1 லட்சத்து 41 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 5, 541 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்து தலைநகர் கெய்ரோவிலும், மற்றொரு முக்கிய நகரமான கிசாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனைத் தடுக்க எகிப்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.