கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது
By: Karunakaran Tue, 28 July 2020 12:43:57 PM
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று புதிதாக 5,324 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.
கர்நாடகத்தில் 1 லட்சத்து ஒரு ஆயிரத்து 465 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அளவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் கர்நாடகம் 4-வது இடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் 75 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனா பாதிப்பிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,961 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக கொரோனா பாதித்தோரில், பெங்களூரு நகரில் 1,470 பேர், பல்லாரியில் 840 பேர், கலபுரகியில் 631 பேர், மைசூருவில் 296 பேர், உடுப்பியில் 225 பேர், தார்வாரில் 193 பேர், பெலகாவியில் 155 பேர், கோலாரில் 142 பேர், பெங்களூரு புறநகரில் 138 பேர், ராய்ச்சூரில் 120 பேர், தட்சிண கன்னடாவில் 119 பேர் ஆகியோர் உள்ளனர்.
கர்நாடகத்தில் இதுவரை 12 லட்சத்து 5 ஆயிரத்து 51 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 28 ஆயிரத்து 224 மாதிரிகள் அடங்கும். இதுவரை 37 ஆயிரத்து 685 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக 61 ஆயிரத்து 819 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.