உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 33 லட்சத்தை கடந்தது
By: Karunakaran Sun, 23 Aug 2020 4:00:57 PM
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. இந்த வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 33 லட்சத்து 59 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60 ஆயிரத்து 878 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நேற்று 43 ஆயிரம் பேருக்கும், பிரேசிலில் 46 ஆயிரம் பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 2 கோடியே 33 லட்சத்து 59 ஆயிரத்து 690 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புடைய 66 லட்சத்து 62 ஆயிரத்து 226 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 798 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 55 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இருப்பினும் கொரோனா காரணமாக இதுவரை 8 லட்சத்து 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.