உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 74 லட்சத்தை கடந்தது
By: Karunakaran Tue, 08 Sept 2020 11:38:34 AM
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியிருப்பினும், மக்கள் பயன்பாட்டுக்கு இன்னும் வரவில்லை.
இருப்பினும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 74 லட்சத்து 74 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 90 ஆயிரத்து 802 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அதிகம் பரவிய நாடுகள் பட்டியலில் பிரேசிலை பின்னுக்குத்தள்ளி இந்தியா 2-வது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவில் நேற்று 25 ஆயிரத்து 317 பேருக்கும், பிரேசிலில் 10 ஆயிரத்து 188 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, உலகம் முழுவதும் 2 கோடியே 74 லட்சத்து 78 ஆயிரத்து 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 70 லட்சத்து 9 ஆயிரத்து 235 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறனர். இவர்களில், 60 ஆயிரத்து 337 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இருப்பினும் வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 95 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இதுவரை 8 லட்சத்து 96 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.