உலகம் முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கை 9 லட்சத்து 44 ஆயிரத்தை கடந்தது
By: Karunakaran Thu, 17 Sept 2020 10:36:34 AM
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியிருப்பினும், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 44 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலின் படி கடந்த 24 மணி நேரத்தில் 1,290 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகி கொண்டே வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 25 ஆயிரத்து 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 2 கோடியே 17 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 9 லட்சத்து 44 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 2,01,321 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 82,066 ஆகவும், பிரேசிலில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,34,174 ஆகவும் உள்ளது.