ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3.5 லட்சத்தைக் கடந்தது
By: Karunakaran Thu, 20 Aug 2020 3:13:49 PM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது. கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.24 கோடியை கடந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 7.87 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான் தற்போது 11-வது இடத்தில் உள்ளது.
கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஈரானில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.5 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் 2,444 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 50 ஆயிரத்து 279 ஆக அதிகரித்துள்ளது.
ஈரானில் ஒரே நாளில் 153 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். இதனால் அங்கு கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 125 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 3.02 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.