ஈரானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,92,439 ஆக உயர்வு
By: Monisha Wed, 17 June 2020 10:53:34 AM
மத்தியக் கிழக்கு நாடுகளான ஈரான் மற்றும் சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தொற்று தற்போது தீவிரமாக பரவி வருகிறது. இதில் ஈரானின் தென் பகுதிகளில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் 82 லட்சத்து 27 ஆயிரத்து 744 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 35 லட்சத்து 3 ஆயிரத்து 529 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவியவர்களில் 42 லட்சத்து 79 ஆயிரத்து 778 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்து 44 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்நிலையில் ஈரானில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,92,439 ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது:-
ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,000க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,92,439 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இதுவரை 9,065 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 1,52,675 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு கூறியுள்ளது.
ஈரானில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அலட்சியம் செய்யாமல் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும், மசூதிகளில் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது.