இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்தை தாண்டியது
By: Monisha Wed, 27 May 2020 12:16:12 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். எனினும் நாடு முழுவதும் வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 1 லட்சத்து 51 ஆயிரத்து 767 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 ஆயிரத்து 387 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 170 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 337 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 64 ஆயிரத்து 426 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 54 ஆயிரத்து 758 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 17 ஆயிரத்து 728 பேருக்கும், குஜராத்தில் 14 ஆயிரத்து 821 பேருக்கும், டெல்லியில் 14 ஆயிரத்து 465 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.