இந்தியாவில் தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
By: Karunakaran Sat, 22 Aug 2020 4:21:55 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளை தொடர்ந்து கொரோனா அதிகம் பாதித்த நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் நேற்று காலை நிலவரப்படி மொத்த பாதிப்பு 29 லட்சத்து 5 ஆயிரத்து 823 ஆக இருந்தது. ஒரே நாளில் 68 ஆயிரத்து 898 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
மேலும் கொரோனா காரணமாக ஒரே நாளில் 983 பேர் பலியாகியுள்ளதால், நாட்டில் கொரோனா உயிரிழந்தோரின் எண்ணிக்கை இதுவரை 54 ஆயிரத்து 849 பேராக அதிகரித்துள்ளது. நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மராட்டியம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகியவை உள்ளன.
இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் முதன்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கு மேல் கொரோனா பரிசோதனைகள் நடந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 21 நாட்களில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் ஏறக்குறைய 100 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளது.
கடந்த 1ந்தேதி கொரோனா பாதிப்புகளில் இருந்து 10 லட்சத்து 94 ஆயிரத்து 374 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 21ந்தேதி கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 21 லட்சத்து 58 ஆயிரத்து 946 ஆக அதிகரித்து உள்ளது. இந்த எண்ணிக்கை சீராக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.