இந்தியாவில் கொரோனா தினசரி பரிசோதனை எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது
By: Karunakaran Fri, 31 July 2020 1:19:19 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அதிகரித்தாலும், கொரோனா பரிசோதனை அதிகரித்ததாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த சில தினங்களாக ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக 5 லட்சத்துக்கும் அதிகமான சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
இதனால் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சுமார் 50 ஆயிரம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 6 லட்சத்தும் மேற்பட்ட சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனாவை திறம்பட சமாளிக்க விரிவான சோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சை நடைமுறையை சுகாதார அமைச்சகம் தொடர்ந்து செயல்படுத்துகிறது. இதனால் தினமும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை 10 லட்சம் என்ற அளவிற்கு உயர்த்துவதே நோக்கம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறி உள்ளது.
விரைவு சோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சையை தொடருமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் உலகளவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.