இந்தியாவில் கொரோனா வைரஸிலிருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்தது
By: Karunakaran Thu, 20 Aug 2020 7:02:30 PM
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மைய புள்ளிவிவரங்களின்படி, உலகளவில் நேற்று மதியம் வரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 41 லட்சத்து 21 ஆயிரத்து 178 ஆக உள்ளது. இதில் முதல் இடத்தில் பிரேசில் உள்ளது. 2-ம் இடத்தில் இந்தியா உள்ளது.
இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை நேற்று காலை நிலவரப்படி 20 லட்சத்து 37 ஆயிரத்து 870 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்து 91 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டோர் விகிதம் என்பது 73.64 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நாட்டில் தற்போது கொரோனாவில் இருந்து மீள்வதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 75 ஆயிரத்து 514 ஆக உள்ளது. நாட்டிலேயே அதிக அளவில் மராட்டிய மாநிலத்தில் கொரோனாவுக்கு அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதற்கு அடுத்த இடங்களில் ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் உள்ளது. மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா கொரோனா வைரஸை திறமையாக கையாண்டு வருகிறது.
இந்தியாவில் தரமான சிகிச்சை அளித்து வருவதால் குணம் அடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகையில், தொடக்கத்தில் இருந்தே மத்திய அரசு ஒரு தரப்படுத்தப்பட்ட, முன்கூட்டியே திட்டமிட்ட, செயல் திறன் மிக்க வழிமுறையை பின்பற்றி வந்தது. இந்த மேலாண்மை உத்தி, கொரோனா இறப்புவிகிதம் 1.91 சதவீதமாக குறைய காரணமாக இருந்ததாக தெரிவித்துள்ளது.