பிரேசிலில் பலியானவர்கள் எண்ணிக்கை 50,617 ஆக அதிகரிப்பு
By: Monisha Mon, 22 June 2020 10:39:09 AM
சீனாவின் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் மனித அழிவை ஏற்படுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனாவால் 90 ஆயிரத்து 31 ஆயிரத்து 789 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 70 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில் பிரேசிலில் கொரோனா வைரஸால் ஏற்படும் பலி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரேசிலில் கொரோனாவுக்கு 640 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் பலியானவர்கள் எண்ணிக்கை 50,617 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பிரேசிலில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 17,400 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரேசிலில் கொரோனாவால் இதுவரை 10,85,038 பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்து கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
கொரோனாவைக் கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிவிப்புகளை பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா அலட்சியம் காட்டி வந்ததால் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச அளவில் கூறப்படுகிறது.