கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது
By: Nagaraj Sat, 16 May 2020 3:51:40 PM
நியூயார்க்: கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நாளுக்கு நாள் உயிர்ப்பலிகளை அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளையே நடுங்க வைத்துள்ளது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஆட்டம் காட்டி வரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் அனைவரிடத்திலும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
பல நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டும், பல நாடுகள் தங்களது எல்லைகளை மூடியும் உள்ளன, மேலும் விமானம், பேருந்து, ரயில், கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்படாமல் முடங்கின.
கொரோனாவிற்கு தற்போதைய நிலவரப்படி உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 308,645 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,628,353 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 17,58,039 பேர் உள்ளனர்.
இந்த வைரஸ் பரவத் தொடங்கியது முதல் விடியும் ஒவ்வொரு நாளிலும் பலி எண்ணிக்கை அதிகரித்தே வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.