- வீடு›
- செய்திகள்›
- பிரேசிலில் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் 28 சதவிகிதம் அதிகம் என தகவல்
பிரேசிலில் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் 28 சதவிகிதம் அதிகம் என தகவல்
By: Karunakaran Sun, 02 Aug 2020 2:42:11 PM
உலகின் மிகப்பெரிய மழைக்காடாக உள்ள அமேசான் காடு, மத்திய தென் அமெரிக்க நாடுகளான பிரேசில், வெனிசுலா, கொலம்பியா, பொலிவியா போன்ற பல நாடுகளை சுற்றி அமைந்துள்ளது. உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணக்கிடைக்காத அரிய வகை விலங்குகள் மற்றும் பறவைகள் உள்பட பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக அமேசான் காடுகள் உள்ளது.
அமேசான் மழைக்காடுகளில் 70 சதவிகித பகுதி பிரேசில் நாட்டில் உள்ளது. கடந்த ஆண்டு பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் பயங்கர காட்டுத்தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சக்கணக்கான ஹேக்டேர் அமேசான் காடுகள் தீக்கிரையாகி, மரங்கள், விலங்குகள், பறவைகள் என இழப்புகள் ஏற்பட்டன. கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனேரோவின் தூண்டுதலின் பெயரிலேயே நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தற்போது இந்த ஆண்டும் அமேசான் காடுகளின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஜூலை மாதம் காட்டுத்தீ ஏற்பட்ட அளவு பல மடங்கு அதிகம். கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமேசானில் 5 ஆயிரத்து 328 காட்டுத்தீ சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த ஆண்டு அதே ஜூலை மாதம் 6 ஆயிரத்து 803 காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது. இது 28 சதவிகிதம் அதிகம் ஆகும்.
கனிமவளங்களை திருடுபவர்கள், சமூக விரோதிகள், சுரங்க வேலைகளில் ஈடுபடுபவர்கள் என பல்வேறு தரப்பினரால் இந்த காட்டுத்தீ சம்பவங்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு ஏற்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரேசிலின் அமேசானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட 30 ஆயிரத்து 900 காட்டுத்தீ சம்பவங்கள், கடந்த 12 ஆண்டுகளிலே நடைபெற்ற அதிகபட்ச காட்டுத்தீ சம்பவம் ஆகும்.