அமெரிக்காவில் டிக்டாக் செயலி உரிமத்தை விற்பனை செய்ய தாய் நிறுவனம் முடிவு
By: Karunakaran Sun, 02 Aug 2020 2:28:12 PM
தென்சீன கடல் விவகாரம், வர்த்தகப்போர், கொரோனா வைரஸ் பரவல் என அமெரிக்க-சீன மோதல் விவகாரம் உச்சத்தை அடைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பாக இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றச்சாட்டி வந்தது இருநாடுகள் இடையே மோதல் போக்கை மேலும் அதிகரித்தது.
அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகம் உளவு வேலையில் ஈடுபடுவதாக கூறி தூதரகத்தை உடனடியாக மூட உத்தரவிட்டது. ஹூஸ்டன் தூதரகம் மூடப்பட்ட சில நாட்களில் பதிலடி நடவடிக்கையாக வுகான் நகரில் அமெரிக்க தூதரகத்தை சீனா மூடியது. இதனால் இருநாடுகள் இடையே மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவை போலவே சீனாவின் டிக்டாக் செயலியை தடை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறுகையில், டிக்டாக்கை பொருத்தவரை அமெரிக்காவில் இந்த செயலியை தடைசெய்ய உள்ளோம். எனக்கு அதிகாரம் உள்ளது. ஒரு சிறப்பு உத்தரவை பிறப்பித்து டிக்டாக்கை தடைசெய்ய என்னால் முடியும் என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் டிக்டாக்கை தடை செய்வதற்கு முன், செயலியின் செயல்பாட்டு உரிமத்தை விற்றுவிட வேண்டும் என டிக்டாக்கின் தாய்நிறுவனமான சீனாவின் பைட் டான்ஸ் முடிவு செய்துள்ளது. நஷ்டத்தை தவிர்க்கும் விதமாக இந்த முடிவை எடுத்துள்ளது. தற்போது, டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமத்தை வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.