பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது
By: Karunakaran Tue, 01 Sept 2020 09:32:26 AM
வழக்கமாக ஜூலை இறுதியில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால், நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் இந்த தொடர் தள்ளிப்போனது. இருப்பினும், பட்ஜெட் தொடர் முடிந்து சுமார் 6 மாதங்கள் ஆகும் நிலையில் மழைக்கால தொடரை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வருகிற 14-ந் தேதி முதல் மழைக்கால தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகம் சார்பில் வெளியான அறிவிப்பில், இந்த தொடர் அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந் தேதி வரை நடத்தப்படும் எனவும், இதில் எந்த விடுமுறையோ, வார விடுமுறையோ இன்றி தொடர்ச்சியாக 18 அமர்வுகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலில் இருந்து உறுப்பினர்களை பாதுகாக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், இரு அவைகளின் அறைகள் மட்டுமின்றி பார்வையாளர் மாடங்களிலும் உறுப்பினர்கள் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து உறுப்பினர்களும் அவை நிகழ்வுகளில் பங்கேற்க வசதியாக பிரமாண்ட திரைகள், சிறப்பு ஒலி அமைப்புகள் என பல்வேறு முதல் முறை நிகழ்வுகள் தயாராகி வருகின்றன. கூட்டம் கூடுவதை தவிர்க்க அதிகாரிகள், ஊடகத்தினருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.