பி.சி.ஆர் பரிசோதனை எண்ணிக்கை 95 ஆயிரத்தை நெருங்கியது
By: Nagaraj Sat, 20 June 2020 5:32:01 PM
இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகள் எண்ணிக்கை 95 ஆயிரத்தை நெருங்கியுள்ளது என சுகாதார அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) மாத்திரம் தொற்றுநோயியல் பணியகத்தினால் 1,495 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அந்தவகையில் கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதிமுதல் இதுவரை 94 ஆயிரத்து 260 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 1950 பேரில் கடற்படையினர் 771 பேர் இதுவரை பூரண குணமடைந்துள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார, கொரோனா தொற்று உறுதியானவர்களில் மேலும் 127 கடற்படையினர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.