- வீடு›
- செய்திகள்›
- எனக்கு எதிராக மருந்து நிறுவனங்கள் கோடிக்கணக்கில் விளம்பரங்கள் செய்தன - டிரம்ப் குற்றச்சாட்டு
எனக்கு எதிராக மருந்து நிறுவனங்கள் கோடிக்கணக்கில் விளம்பரங்கள் செய்தன - டிரம்ப் குற்றச்சாட்டு
By: Karunakaran Sun, 22 Nov 2020 4:12:44 PM
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 3-ந் தேதி நடந்தது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன், தற்போதைய ஜனாதிபதியும், குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்டு டிரம்பை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். ஆனால் டிரம்ப் இன்னும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டி வருகிறார்.
நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் பேட்டி அளித்தபோது, பெரிய மருந்து நிறுவனங்கள் எனக்கு எதிராக செயல்பட்டுள்ளன. எனக்கு எதிரான விளம்பரங்களுக்காக அவை கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளன. நான்தான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றேன். கிட்டத்தட்ட 7 கோடியே 40 லட்சம் வாக்குகளை நாங்கள் கண்டுபிடிப்போம் என்று கூறினார்.
மேலும் அவர், எங்களுக்கு எதிராக மருந்து கம்பெனிகள் செயல்பட்டன. ஊடகங்கள் எங்களுக்கு எதிராக இயங்கின. எங்களுக்கு எதிராக நேர்மையற்ற செயல்கள் நிறைய நடந்தன. இதுபோன்று நான் பார்த்ததே இல்லை என கூறினார். அதன்பின் அமெரிக்க மக்களுக்கு மருந்துச்சீட்டுகளின் பேரில் வழங்கக்கூடிய மருந்துகளின் விலைகளை குறைப்பதற்கான விதிகளையும் அவர் அறிவித்தார்.
அப்போது அவர் கூறுகையில், இதன் மூலம் நோயாளிகள் பலன் பெறுவார்கள். அவர்கள் மருந்துகளுக்கு அதிக விலை கொடுத்தார்கள். 51 ஆண்டுகளில் முதல் முறையாக மருந்துகளின் விலையை நாங்கள் குறைத்துள்ளோம். இதன் மூலம் 30 முதல் 50 சதவீதம் வரையில் மருந்து விலை குறையும் என குறிப்பிட்டார்.அதே நேரத்தில் அவர் நிருபர்களிடம் இருந்து எந்த கேள்வியையும் எதிர்கொள்ளவில்லை. மேலும், மருந்துகளின் விலைகளை குறைக்கும் விதிகளுக்கு மருந்து நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.