காங்கிரஸ் கட்சியின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பு
By: Nagaraj Sun, 26 Mar 2023 6:28:59 PM
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
கர்நாடக மாநிலம் கோலாரில் 2019 ஏப்ரல் 2019 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை அவதூறாகப் பேசியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில், சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக இருந்த ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், எம்.பி. ராகுல் காந்தியை அப்பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.
இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வயநாடு தொகுதியில் நேற்று கருப்பு தினம் கடைபிடிக்கப்படும் என காங்கிரஸ் அறிவித்மது. பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் கட்சி முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் அவரது இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், பிரியங்கா காந்தி வத்ரா, ஜெய்ராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ராகுல் காந்தி எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, இன்று டெல்லி ராஜ்காட் பகுதியில் சங்கல்ப சத்தியாகிரகம் என்ற பெயரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.