மதுரை மாநாட்டிற்கு போலீசார் போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை
By: Nagaraj Mon, 21 Aug 2023 9:05:29 PM
மதுரை: போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை... மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டிற்கு காவல்துறையினர் போதுமான பாதுகாப்பை வழங்கவில்லை என கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள், பல இடங்களில் போக்குவரத்து நெரிசலால் ஆங்காங்கே காத்திருந்ததாக கூறியுள்ளார்.
30 கிலோ மீட்டருக்கு முன்பே நிறுத்தப்பட்ட வாகனங்களில் இருந்து, மகளிர் மற்றும் குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக தொண்டர்கள் நடந்தே சென்று மாநாட்டில் பங்கேற்றதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
மாநாட்டிற்கு வருபவர்களை தடுக்கும் நோக்கில் போலீசார் பல்வேறு இடையூறுகளை செய்ததாகவும், துரோகிகளும் சதி வேலைகளில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநாட்டின் வெற்றி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.