வரலாறு காணாத வீழ்ச்சிக்கு மத்திய அரசின் கொள்கைகளே காரணம் - ராகுல்காந்தி
By: Karunakaran Fri, 11 Sept 2020 2:19:36 PM
கொரோனா பரவ ஆரம்பித்திலிருந்தே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திமத்திய அரசின் நடவடிக்கை குறித்து விமர்சித்து வருகிறார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் இந்தியாவில் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டு, கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஊரடங்கு காரணமாக ஏழை மக்கள், கூலி தொழிலாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வேலைவாய்ப்பு தொடர்பாக காங்கிரஸ் கட்சி நேற்று ஆன்லைன் பிரசாரத்தில் ஈடுபட்டது. ‘வேலைவாய்ப்புக்காக பேசுங்கள்’ என்ற அந்த பிரசாரம், காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர்கள் பலர் பங்கேற்று தங்கள் ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து வெளியிட்டனர்.
இந்த பிரசாரத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், கோடிக்கணக்கான வேலை இழப்புக்கும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வரலாறு காணாத வீழ்ச்சிக்கும் மத்திய அரசின் கொள்கைகளே காரணம். இந்திய இளைஞர்களின் எதிர்காலம் நசுக்கப்பட்டு விட்டது. அந்த இளைஞர்களின் குரலை மத்திய அரசு கவனிக்க வைப்போம். அதற்கு இந்த பிரசாரத்தில் பங்கேற்று எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ‘டுவிட்டர்’ பக்கத்தில், ஊரடங்கின் போதும், தளர்வுகளின்போதும் தினந்தோறும் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை இழந்து வருவதாகவும், அதை பா.ஜனதா அமைதியாக வேடிக்கை பார்த்து வருகிறது. ஆனால், தேசம் அமைதியாக இருக்காது. வேலைவாய்ப்புக்காக பேசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.