புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு
By: Monisha Thu, 28 May 2020 12:55:48 PM
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் மாதம் 24-ந்தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போதய 4-ம் கட்ட ஊரடங்கு வருகிற 31-ந்தேதி ஊரடங்கு முடிவுக்கு வருகிறது.
ஊடரங்கு அமலுக்கு வந்து 2 மாதம் கடந்துவிட்ட நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் தொடர்ந்து நோய் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. எனவே 5-வது கட்டமாக ஊரடங்கை நீட்டிக்கலாமா? என்பது குறித்து பிரதமர் அலுவலகம் விரிவாக ஆலோசனை நடத்தி வருகிறது.
ஊரடங்கால் அனைத்து மாநிலங்களுக்கும் கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்வதற்கு மீண்டும் பல தளர்வுகளை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே 5-வது முறை ஊரடங்கு நீட்டிக்கும்பட்சத்தில் பல்வேறு விதமான தளர்வுகளையும் அறிவிக்க திட்டமிட்டுள்ளனர்.
மத்திய அரசு அதிகாரிகள் மட்டத்தில் வந்த தகவல்படி ஊரடங்கு இன்னும் 2 வார காலத்திற்கு நீட்டிக்கப்படலாம் என்று தெரிய வந்துள்ளது. நோய் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகளை தொடர்வதுடன் மேலும் வலுவான சில கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 11 நகரங்கள் தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள மொத்த நோயாளிகளில் 70 சதவீதம் பேர் இந்த 11 நகரங்களில் உள்ளனர். சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா போன்ற நகரங்களும் இதில் அடங்கும். 11 நகரங்களிலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதுடன் பல புதிய கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
மற்ற இடங்களில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. குறிப்பாக வழிபாட்டு தலங்கள் திறக்கும் அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2 மாதம் ஊரடங்கு நீட்டித்த பிறகும் நோய் கட்டுப்பாட்டுக்குள் வராதது இப்போது விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இடம் பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை, அவர்களால் நோய் பரவுதல் போன்றவை பெரும் சிக்கலை உருவாக்கி உள்ளது.
மேலும் வெளிமாநிலத்தில் இருந்து வரும் பல லட்சம் பேரை தனிமைப்படுத்துவது மாநிலங்களுக்கு பெரும் சுமையாக இருக்கிறது. இது சம்பந்தமாகவும் மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.