டெல்லியில் உள்ள வாஜ்பாயின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் அஞ்சலி
By: Karunakaran Sun, 16 Aug 2020 3:06:31 PM
முன்னாள் பிரதமர் மற்றும் பாரத்திய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி, ஆகஸ்ட் 16ஆம் தேதி 2018 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு மாணவர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். மேலும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயிக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க வளர்ப்பு மகள் நமீதா எரியுட்டினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு வெளிநாட்டு தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்பட பலரும் வாஜ்பாய் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், நாட்டின் வளர்ச்சிக்கு வாஜ்பாய் அளித்த பங்களிப்பை இந்தியா என்றும் நினைவில் கொள்ளும் என்று பதிவிட்டுள்ளார்.