ஜனாதிபதி பலம் வாய்ந்த தீர்மானங்களை எடுப்பார்; அமைச்சர் விமல் தகவல்
By: Nagaraj Tue, 24 Nov 2020 09:45:21 AM
பலம் வாய்ந்த தீர்மானங்கள்... உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுக்கு பின்புலமாக இருந்தவர்களுக்கு எதிராக ஜனாதிபதி பலம்வாய்ந்த தீர்மானங்களை எடுப்பார் என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவம்ச தெரிவித்தார்.
அத்துடன், நாட்டில் அடிப்படைவாதத்தை போதிக்கும் அனைத்து அடிப்படை மூலாதாரங்களை ஒழிப்பதற்கும் அவர் நடவடிக்கையெடுப்பார். அந்த தேவையை நிறைவேற்றவே மக்கள் அவரை ஜனாதிபதி கதிரையில் அமரச்செய்தனரெனவும் தெரிவித்தார். அத்துடன், புலிகள் நினைவுநாளை அனுஷ்டிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ். நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கை எதிர்கொள்ள கொழும்பில் இருந்து சட்ட மாஅதிபர் திணைக்கள அதிகாரிகள் சென்றமையாலேயே நினைவு தினத்தை அனுஷ்டிக்க தடைவிதிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் அவ்வாறு கூறினார். மேலும் கருத்து வெளியிடுகையில், நாட்டை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான தேவையான நடவடிக்கைகள் வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக அதற்கு முன்னர் அமைச்சரவைப் பத்திரங்கள் ஊடாகவும் செய்யப்பட்டுள்ளன.
டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான செயலணியொன்றை உருவாக்குமாறு ஹரின் பெர்ணான்டோ
கூறியுள்ளார். அவ்வாறான சாதகமான எதிர்கட்சியின் கருத்துகளை உள்வாங்கி
பயனுள்ள விதத்தில் செயற்பட நாம் தயாராக உள்ளோம்.
பாதுகாப்பு
அமைச்சுக்கு பாரியளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சிலர்
கருத்துகளை கூறுகின்றனர். ஜனாதிபதி செயலகத்திற்கு 2019ஆம் ஆண்டுடன்
ஒப்பிடும்போது 400 மில்லியன் நிதி குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சில் இராணுவத்தினரின் செயற்பாடுகள் மட்டுமல்ல உள்ளன.
அனர்த்த முகாமைத்துவம், மாவட்ட நிர்வாகம் உட்பட பலத்துறைகளுக்கு நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம்
பேருக்கான தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு 26 மில்லியன்
இதில்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட மற்றும் பிரதேச
நிர்வாகத்திற்கு 40 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று
தெரிவித்தார்.