மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றியதாக பிரதமர் பெருமிதம்
By: Nagaraj Wed, 30 Sept 2020 4:32:18 PM
மாணவர்கள் கோரிக்கை நிறைவேற்றம்... கொவிட்- 19 அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பாடசாலையை கூடிய விரைவில் ஆரம்பிக்குமாறு மாணவர்கள் விடுத்த கோரிக்கையை, அவர்களின் பாதுகாப்பு குறித்த மிகுந்த அக்கறையுடன் தமக்கு நிறைவேற்ற முடிந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (புதன்கிழமை) நடைபெற்ற கொழும்பு இந்து கல்லூரியின், வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த பரிசளிப்பு விழாவில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், “மாணவர்களை பண்படுத்தி வழிப்படுத்துவதில் பாடசாலைகளே முதன்மை வகிக்கின்றன. ‘ஒரு பாடசாலை திறக்கப்படும்போது ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படும்’ என்பது பழமொழி.
நாட்டின் வளம் என்பது நல்ல மாணவர்களை உருவாக்கி கல்வியில் முன்னிலையில் இருப்பதுடன், நாட்டின் பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்து சுபீட்சமான வாழ்வினைக் கொண்டாடும் சமூகச்சூழலை ஏற்படுத்தி முழு நாட்டினையையும் செல்வச் செழிப்புடன் ஆக்கும் ஒருபெரும் முயற்சியாகும். கல்வியால் ஏற்படுத்த முடியாத மாற்றத்தை எக்காரணியும் ஏற்படுத்த முடியாது என்பதில் ஐயமில்லை.
30 ஆண்டுகால யுத்தத்தை நிறைவுசெய்து நாட்டில் சமாதானத்தினை கட்டியெழுப்பி
நாட்டின் அபிவிருத்தியை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். போரின்
பின்னர் நாட்டினை கட்டியெழுப்ப வடக்கு- கிழக்கு மாகாணங்களில் பல
திட்டங்களை எமது அரசாங்கம் அன்று கொண்டுவந்தது. கல்விச் செயற்பாடுகளை
சர்வதேச தரத்திற்கு உயர்த்தி எம் நாட்டின் கல்வி வளர்ச்சியை மேன்நிலைக்கு
கொண்டுசெல்வதே எமது இலட்சியமாகும்.
கொரோனா நிலைமை காரணமாக பாடசாலை
விடுமுறை காலத்தில் நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக மாணவர்களின் நிலைமைகளை
செவிமடுக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்போது பாடசாலையை விரைவாக
ஆரம்பிக்குமாறு மாணவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டனர். அதற்கேற்ப
முடங்கிக்கிடந்த நாட்டின் நிலைமைகளை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்து,
பாடசாலை நடவடிக்கைகளை விரைவாக ஆரம்பிக்கும் முயற்சியில் நாம்
வெற்றிகண்டோம். பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக
பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் அதிக அக்கறை செலுத்தப்பட்டது.
கல்வியில்
போன்றே மாணவர்கள் விளையாட்டு துறையிலும் ஈடுபட வேண்டும். உங்களை போன்றே
வடக்கு கிழக்கு மற்றும் மலையக மாணவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கற்றல்
செயற்பாட்டில் ஈடுபட்டமை அறிய முடிந்தது. எதிர்காலத்தின் தலைவர்களாக
விளங்கும் நீங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக புரிந்துணர்வுடன் செயற்பட
வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.