வரும் அக்.1ம் தேதி 5 ஜி சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
By: Nagaraj Sat, 24 Sept 2022 9:54:55 PM
டெல்லி: இந்தியாவில் 5ஜி அலைவரிசை ஏலம் கடந்த ஆகஸ்டு மாதம் நிறைவடைந்த நிலையில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார்.
இந்தியாவில் 5ஜிக்கான ஏலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கேபினட் குழு கடந்த மாதங்களுக்கு முன்பாக ஒப்புதல் வழங்கியது.
இந்நிலையில், கடந்த ஜூலை 26-ம் தேதி 5ஜி அலைவரிசைக்கான ஏலம் தொடங்கியது. பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் - ஐடியா, அதானி குழுமம் ஆகிய 4 நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்குபெற்றன. முதல் நாளன்று 4 சுற்றுகளாக 5ஜி ஏலம் நடைபெற்றது. இதுவரை நடந்து முடிந்த 40 சுற்று ஏலத்தில் 4 நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியதாக ஒன்றிய தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
5ஜி அலைவரிசையை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணியை ஆகஸ்டு 10-ம்
தேதி நடைபெறும் என்றும், அக்டோபர் மாதத்தில் 5ஜி சேவைகள் தொடங்கும் எனவும்
ஒன்றிய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் கூறினார். ஆனால் ஏலத்தில் ரூ.4.3 லட்சம்
கோடி கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது ரூ.1.5 லட்சம் கோடி
மட்டுமே கிடைத்துள்ளதை காரணமாக கூறி எதிர்க்கட்சிகள் பலர் இதில் ஊழல்
நடந்திருப்பதாக குற்றம்சாட்டினர்.
உலகம் முழுவதும் கடந்த 20
ஆண்டுகளில் செல்போன் தொழில்நுட்பம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு
வளர்ச்சியடைந்து இருக்கிறது. 5ஜி அலைவரிசை மூலம் சேவைகள் கிடைத்தால்
தற்போது அமலில் உள்ள 4ஜி அலைவரிசையை விட 10 மடங்கு அதிக வேகத்தில் இணையதள
வசதிகளும் 3ஜியை விட 30 மடங்கு அதிக வேகத்தில் இணைய வசதிகளும் நமக்கு
கிடைக்கும். இந்தியாவில் 5ஜி சோதனை சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில்
வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன.