செனாப் ஆற்றின் மீது அமைக்கப்படும் ரயில் பாலம் அடுத்த ஆண்டில் நிறைவடையும்
By: Nagaraj Mon, 03 Aug 2020 11:58:15 AM
அடுத்த ஆண்டிற்குள் நிறைவடையும் ஜம்மு - -காஷ்மீரில் உள்ள செனாப் ஆற்றின் மீது உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் அமைக்கும் பணிகள், அடுத்த ஆண்டிற்குள் நிறைவடையும் என, ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ஜம்மு - காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளை, பிற பகுதிகளுடன், ரயில் மூலம் இணைப்பதற்கான திட்டப்பணிகள், தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், ஜம்மு - காஷ்மீரில் உள்ள செனாப் ஆற்றின் குறுக்கே, உலகின் மிக உயர்ந்த, ரயில் பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பாலம், தரை மட்டத்தில் இருந்து, 359 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டு வருகிறது.
உலகின் மிக உயரத்தில் வடிவமைக்கப்படும் இந்த பாலம், அதிகபட்சமாக மணிக்கு,
266 கி.மீ., காற்றின் வேகத்தை தாங்கக் கூடியதாக இருக்கும். இந்த ரயில்
திட்டத்தின் கீழ் உள்ள பணிகள், ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. மீதமுள்ள,
111 கி.மீ., துாரம் உள்ள கத்ரா - பானிஹால் பிரிவில், பணிகள் தற்போது
செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மொத்தமுள்ள 174 கி.மீ., சுரங்க
பாதைகளில், 126 கி.மீ.,க்கு பணிகள் நிறைவடைந்துள்ளன. கடந்த ஓராண்டில்,
மத்திய அரசு அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், பாலத்தின் கட்டுமான
பணிகள், மிக விரைவாக நடைபெறுவதால், அடுத்த ஆண்டிற்குள் நிறைவடையும். இந்த
ரயில் பாலம், 2022ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் நிலையில், காஷ்மீர்,
நாட்டின் பிற பகுதிகளுடன், ரயில் மூலம் இணைக்கப்படும்.
இத்திட்டப்பணிகள்,
ஜம்மு - காஷ்மீரின் பொருளாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், அதன்
அபிவிருத்திக்கும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.