கொரோனாவால் அமெரிக்கர்கள் இறக்கிற அபாயம் அதிகமாக உள்ளது - நிபுணர் கருத்து
By: Karunakaran Sat, 08 Aug 2020 09:49:51 AM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனா காரணமாக அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. உலகின் வேறெந்த நாட்டையும் விட அந்த நாடு அதிகளவு பாதிப்பை சந்தித்து வருகிறது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது.
இந்நிலையில் நேற்று மதிய நிலவரப்படி, அமெரிக்காவில் கொரோனா பாதிப்பினால் இறந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 104 என அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு, பலி மற்றும் குணமடைந்தோர் என அனைத்திலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
ஒபாமா ஆட்சி காலத்தில், வெள்ளை மாளிகையின் எபோலா வைரஸ் தடுப்பு நிபுணராக இருந்த ராப் கிளெயின் தற்போது கொரோனா வைரஸ் கருத்து தெரிவிக்கையில், பூமியில் மிக மோசமான இறப்பு எண்ணிக்கையை அமெரிக்கா கொண்டுள்ளது. நீங்கள் வேறு எந்த நாட்டிலும் இருப்பதை விட ஒரு அமெரிக்கராக இருந்தால் கொரோனாவால் இறக்கிற அபாயம் அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் இதுவரை 48 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா காரணமாக பாதிப்படைந்துள்ளனர். அமெரிக்கா அதிபர் டிரம்ப் கொரோனா பரவலை சரியாக கையாளவில்லை என எதிர்க்கட்சியினர் மற்றும் பலர் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.