சவுதி வந்த பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரலை சந்திக்க மறுத்த சவுதி பட்டத்து இளவரசர்
By: Karunakaran Wed, 19 Aug 2020 6:34:05 PM
பாகிஸ்தானின் நட்பு நாடுகள் பட்டியலில் பல ஆண்டுகளாக சவுதி அரேபியா. இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நட்பு நீடித்து வந்தது. சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் அமைப்பில் பாகிஸ்தான் நாடும் அங்கம் வகித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு அரசுமுறை பயணமாக பாகிஸ்தான் வந்த சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டு அரசுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.
இந்த சலுகை மூலம் சவுதியில் இருந்து இதுவரை 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிற்கு பாகிஸ்தான் கடனுதவி பெற்றிருந்தது. இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் ஆதரவை பெற அந்த கூட்டத்தை கூட்ட பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டு தோல்வி அடைந்தது.
சவுதி தலைமையிலான அந்த கூட்டமைப்பு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி சவுதி அரேபியாவுக்கு எச்சரிக்கை விடும் வகையில் கருத்து தெரிவித்தார். முகமது குரேஷியின் கருத்து சவுதி அரசுக்கு எச்சரிக்கை விடும் நோக்கிலும், ஆதிக்கம் செலுத்தும் நோக்கிலும் இருந்தது.
பாகிஸ்தான் மந்திரியின் கருத்தால் ஆத்திரமடைந்த சவுதி அரேபியா, பாகிஸ்தானுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 6.2 பில்லியன் டாலர்கள் கடனுதவியை ரத்து செய்துள்ளது. மேலும், கடனுதவியும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷா குரேஷியின் கருத்து தொடர்பாக மன்னிப்பு கோரவும், ஆலோசனை நடத்த பாகிஸ்தான் ராணுவ தளபதி குவாமர் ஜாவேத் பஜ்வா மற்றும் அந்நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் தலைவர் கடந்த திங்கள் கிழமை சவுதி அரேபியா வந்தனர்.
ஆனால், பாகிஸ்தான் ராணுவ தளபதி பஜ்வா, அவருடன் வந்த ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவரை சந்திக்க சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதன் காரணமாக இம்ரான்கான் அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது. மேலும், சவுதி பட்டத்து இளவரசர் சல்மானின் இந்த முடிவு இந்தியாவுடனான சவுதி அரசின் நட்பை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.