கொரோனாவால் வேலை இழந்த இளைஞரின் தன்னம்பிக்கை வென்றது
By: Nagaraj Tue, 28 July 2020 7:16:57 PM
மனஉறுதியுடன் எதிர்கொண்டு சாதித்த இளைஞர்... கொரோனா பரவல் காரணமாக லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர். வேலை பறி போனதால், பலர் மனமுடைந்து விடுகின்றனர். சிலர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். ஆனால்,மன உறுதியுடன் எதையும் எதிர்கொண்டால் வெற்றிதான் என்று நம்பிக்கை நட்சத்திரமாக மாறி உள்ளார் கேரள இளைஞர்.
இடுக்கி மாவட்டம் அடிமாலியை சேர்ந்தவர் ராபின் அந்தோணி. எம்.பி.ஏ படித்த இவர் மும்பையிலுள்ள டென்டல் கேர் கம்பெனியில் வேலை பார்த்தார். கடும் உழைப்பின் பயனாக விரைவிலேயே சேல்ஸ் மேனேஜராக அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது. நல்ல சம்பளம், உயர்ந்த வாழ்க்கை, கிரிடிட் கார்டு என்று ராபின் அந்தோணியின் வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. ஆனால், கொரோனா தாக்கம் ராபின் அந்தோணியின் வாழ்க்கையை புரட்டி போட்டது.
கொரோனா தாக்கம் காரணமாக நான்கு மாதங்களுக்கு முன் வேலையை இழந்தார் ராபின் அந்தோணி. அதற்கு பிறகு வாழ்க்கையே மாறிப் போனது. வேலையை இழந்த அவர் இரண்டு மாதங்களுக்கு பிறகே சொந்த ஊரான அடிமாலிக்கு வந்தார். கடந்த இரு மாதங்களாக வேலை இல்லை.
கையில் இருந்த பணமும் கரைந்து போனது. எனவே, குடும்பத்துக்கு பாரமாக இருக்க விரும்பாத அவர் மாற்று பணியை தேட தொடங்கினார்.
தன்
விலை உயர்ந்த உடைகள், ஷூக்கள், வாட்சுகள், செல்போன்கள் கூடவே தன்
ஈகோவையும் மூட்டைக் கட்டி வைத்தார். தற்போது, சொந்த ஊரில் சித்தாள் வேலை
பார்க்கும் ராபின் அந்தோணிக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 800 வரை சம்பளமாக
கிடைக்கிறது. கேரளாவில் வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்கு
சென்று விட்டதால், அந்த மாநிலத்தில் சித்தாள் வேலை பார்க்க ஆள் பற்றாக்குறை
ஏற்பட்டுள்ளது.
இதனால், சித்தாள் வேலை பார்க்க வருபவர்களுக்கு நல்ல
சம்பளமும் வழங்கப்படுகிறது. எப்போதும் வேலை வாய்ப்பும் இருந்து கொண்டே
உள்ளது. தற்போது , ராபின் கையில் மீண்டும் பணம் புழங்கத்
தொடங்கியிருப்பதால் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குஅவர் திரும்ப
தொடங்கியுள்ளார். இதனால் நம்பிக்கை நட்சத்திரமாக அவர் உயர்ந்து நிற்கிறார்.