Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஓய்வின்றி 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய எஸ்.பி.பி.,யின் மறைவு கொடுத்த அதிர்ச்சி

ஓய்வின்றி 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய எஸ்.பி.பி.,யின் மறைவு கொடுத்த அதிர்ச்சி

By: Nagaraj Fri, 25 Sept 2020 3:01:24 PM

ஓய்வின்றி 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய எஸ்.பி.பி.,யின் மறைவு கொடுத்த அதிர்ச்சி

திரைப்பாடல்களுக்கென ஆறு முறை தேசிய விருதுகளை குவித்து 40 ஆயிரம் பாடல்களை ஓய்வின்றி பாடிய பாடும் நிலா எஸ்.பி.பி. இன்று நிரந்தரமாக ஓய்வெடுத்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு என பல மொழிகள் அவருக்கு அத்துப்படி. "ஏக் துஜே கேலியே" விற்குப் பிறகு பாலிவுட்டையும் ஆக்கிரமித்துக் கொண்டார் எஸ்.பி.பி. ஒருநாளைக்கு 19 பாடல்களைப் பாடும் அளவிற்கு வளர்ச்சிபெற்றார்.

திரைப்பாடல்களுக்கென ஆறு முறை தேசிய விருதுகளை வாங்கியிருக்கிறார். தமிழ் இசையுலகைக் கட்டியாண்ட இளையராஜாவிற்கு மிக நெருக்கமான நண்பர். மற்ற எவரையும்விட இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாடியதுதான் அதிகம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா, துளு, படகா, மராட்டி என பல மொழிகளில் ஆயிரம், இரண்டாயிரம் அல்ல நாற்பதாயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார் எஸ்.பி.பி.

பாடல்கள் பாடுவது மட்டுமல்ல; நடிப்பும் எஸ்.பி.பிக்கு கைவந்த கலை. 'கேளடிக் கண்மணி'-யில் ராதிகாவுடன் இணைந்து நடித்தது, காதலன் திரைப்படத்தில் பிரபு தேவாவுக்கு தந்தையாக நடித்தது, ப்ரியமானவளே திரைப்படத்தில் விஜய்க்கு தந்தையாக நடித்தது ஆகியவை மிகுந்த வரவேற்பைப் பெற்றவை.

கேளடி கண்மணி திரைப்படத்தில், "மண்ணில் இந்தக் காதலன்றி" பாடலை மூச்சுவிடாமல் பாடி, அனைவரையும் அதைப்போலவே ஒரு பாடலைப் பாடிவிடவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தினார். இந்த பாடல் இல்லாத இசைக்கச்சேரிகளே இல்லை எனலாம். இன்றுவரை இப்பாடலை அவரைப் போலவே பாடிவிடவேண்டும் என்பது ஒவ்வொரு பாடகருக்கும் சவாலாக இருக்கிறது.

sbp,40 thousand songs,private hospital,corona ,
எஸ்.பி.பி., 40 ஆயிரம் பாடல்கள், தனியார் மருத்துவமனை, கொரோனா

அதேசமயம், 'கேளடி கண்மணி' போல் அல்லாமல், அமர்க்களம் திரைப்படத்தில் 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாடல் முழுவதையும் மூச்சுவிடாமல் பாடியது எஸ்.பி.பியின் தனிச்சிறப்பு.
இளையராஜா மட்டுமல்லாமல், ரஹ்மான், அனிருத் வரை அடுத்தடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி வந்திருக்கிறார். இந்த ஆண்டு வெளியான 'தர்பார்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாந்தாண்டா இனிமேலு' பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பாடல் நிகழ்ச்சிகளில் நடுவராகப் பங்கேற்றுவந்தார் எஸ்.பி.பி. அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது தான் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கொரோனா அறிகுறிகளுடன் ஆகஸ்ட் 5-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை அமைந்த கரையிலிலுள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்று வந்த அவர், கடந்த 4-ம் தேதி கொரோனா தொற்றில் இருந்து மீண்டார். ஆனாலும், கொரோனா தாக்கத்தால் அவரது உடல்நிலை மோசமடைந்து இன்று மதியம் 1.04 மணியளவில் உயிரிழந்தார்.

Tags :
|